அஜித்தின் அடுத்த படத்தைத் தயாரிக்கப்போவது யார்? என்கிற கேள்வி பல வாரங்களாக நீடிக்கின்றது.
ஏஜிஎஸ் நிறுவனம், சுரேஷ் பாலாஜி மற்றும் சத்யஜோதிபிலிம்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் பெயர் பரிசீலனையில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. இப்போது அஜித் நடிக்கும் அடுத்த படத்தைத் தயாரிக்கப்போவது சத்யஜோதிநிறுவனம்தான் என்று சொல்கிறார்கள். இப்போது இந்தப்படத்தை இயக்கப்போவது யார்? என்பது குறித்த விவாதம் தொடங்கியிருக்கிறது.
வீரம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவாவே அடுத்தபடத்தையும் இயக்குவதாகச் சொல்லப்பட்டது. அதேசமயம், இயக்குநர் விஷ்ணுவர்தனும் அஜித்துக்காக ஒரு கதையைத் தயார் செய்துகொண்டிருக்கிறார். அஜித்தின் சம்மதத்தோடுதான் அவர் கதை தயாரிப்பில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இவற்றைத் தாண்டி மூன்றாவதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அஜித்தை இயக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்போதைக்கு சத்யஜோதிபிலிம்ஸ் நிறுவனத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கலாம் என்றும் சொல்கிறார்கள். இதேவேளை கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக லோரன்சை வைத்தே இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.